இந்திய நாட்டின் 76-வது சுதந்திர தினம் மற்றும் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 22 மற்றும் 29-ஆம் தேதிகளில் தமிழகத்தில் 33 இடங்களில் அணிவகுப்பு நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆர்.எஸ்.எஸ். தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கு கடந்த 16-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கவில்லை என்று கூறி காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஏற்கனவே அணிவகுப்பு நடத்த அனுமதி கோரிய தேதிகள் முடிவடைந்துவிட்ட நிலையில், இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், மனுத்தாக்கல் நடைமுறைகள் முடிந்தபிறகு இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.