தங்களிடம் பெரும்பான்மை இருப்பதால் பாஜக எதையும் செய்துவிடலாம் என நினைப்பதாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
தில்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டிற்கான குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள விருந்தினர் அழைப்பிதழில் 'இந்தியா' என்பதற்கு பதிலாக 'பாரதம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது (பாரத குடியரசுத் தலைவர்) நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
தில்லியில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் பேசுகையில், 'பாரதம் என்ற பெயர் அரசியலமைப்புச் சட்டத்திலேயே இருக்கிறது. எனவே, மத்திய அரசு அந்த பெயரை பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியாது, அது தவறு என்றும் சொல்லிவிட முடியாது.
ஆனால், எதிர்க்கட்சிகளின் கூட்டணி 'இந்தியா' என பெயர் வைத்துள்ளதால் இந்தியா என்ற வார்த்தையைப் பயன்படுத்த பாஜக அஞ்சுகிறது.
தங்களிடம் பெரும்பான்மை இருப்பதால் பாஜக எதையும் செய்துவிடலாம் நினைக்கிறது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் எதற்காக என இப்போதுவரை தெரியவில்லை.
ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைச் சாத்தியம் இல்லாதது. நடைமுறை சாத்தியமில்லாத திட்டங்களையே பாஜக புகுத்த முயற்சிக்கிறது' என்று பேசினார்.