தினமணி இணையதளத்தில் செய்தி வெளியான சில மணி நேரங்களில் அகற்றப்பட்ட கழிவு லாரி!

தினமணி இணையத்தில் செய்தி வெளியான சில மணி நேரங்களில் ஆலங்குளம் அரசுப்பள்ளி முன் நிறுத்தப்பட்ட கழிவு லாரியை போலீசார் அகற்றியுள்ளனர். 
ஆலங்குளம் அரசுப்பள்ளி முன் 40 நாள்களாக நிறுத்தப்பட்டிருந்த கழிவு லாரி அகற்றப்பட்ட பின்பு...
ஆலங்குளம் அரசுப்பள்ளி முன் 40 நாள்களாக நிறுத்தப்பட்டிருந்த கழிவு லாரி அகற்றப்பட்ட பின்பு...
Published on
Updated on
1 min read

ஆலங்குளம்: கேரளத்திலிருந்து முறைகேடாக கொண்டுவரப்பட்ட கழிவுகள் அடங்கிய லாரியை 40 நாட்களுக்கும் மேலாக அரசுப் பள்ளி முன்பாக போலீசார் நிறுத்தி வைத்துள்ளது குறித்து தினமணி இணையத்தில் செய்தி வெளியான சில மணி நேரங்களில் அந்த லாரியை போலீசார் அகற்றி வேறு இடத்திற்குக் கொண்டு சென்றனர். 

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கேரள கழிவுகளைக் கொண்டு வந்த லாரி ஜூலை மாதம் 27 ஆம் தேதி பறிமுதல் செய்யப்பட்டது. அந்த லாரியில் கேரளத்தில் இருந்து மருத்துவக் கழிவு, பிளாஸ்டிக், தெர்மாகோல் கழிவு உட்பட சுற்றுச்சூழலுக்கு கேடுகளை விளைவிக்கும் சுமார் 10 டன் கழிவுகள் இருப்பது தெரிய வந்தது. 

இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப் பதிந்து இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதுதொடர்பான வழக்கு ஆலங்குளம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அந்த லாரி கடந்த 40 தினங்களுக்கும் மேலாக ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி அடைந்தனர். இதுகுறித்து புகார் எழுந்ததை அடுத்து சில நாள்கள் அந்த லாரியை காவல் நிலையம் அருகில் நிறுத்தினர். 

    அரசுப் பள்ளி முன் 40 நாள்களாக நிறுத்தப்பட்டிருந்த கழிவு லாரி   
    அரசுப் பள்ளி முன் 40 நாள்களாக நிறுத்தப்பட்டிருந்த கழிவு லாரி   

இந்நிலையில் விடுமுறை தினமான புதன்கிழமை பள்ளி வாசல் முன்பு கழிவுகள் அடங்கிய லாரியை போலீசார் கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் இன்று(வியாழக்கிழமை) காலை வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி முன்பாக கழிவுகள் அடங்கிய லாரி நிற்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதிலிருந்து துர்நாற்றமும் வீசியதால் மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

தனியார் பள்ளி முன்பு போலீசாரால் இப்படி நிறுத்த முடியுமா என மாணவர்களின் பெற்றோர்கள் கேள்வி எழுப்பினர். போலீசாரின் இந்த செயல் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்தான செய்தி தினமணி இணையதளத்தில் இன்று காலை வெளியானது. செய்தி வெளியான சில மணி நேரங்களில் காவல்துறை உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில் அந்த லாரியை ஆலங்குளம் போலீசார் அகற்றி வேறு இடத்திற்குக் கொண்டு சென்றனர். இதையடுத்து மாணவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com