தென்காசி: கேரளத்திலிருந்து முறைகேடாக கொண்டுவரப்பட்ட கழிவுகள் அடங்கிய லாரியை 40 நாள்களுக்கும் மேலாக அரசுப் பள்ளி முன்பாக நிறுத்தி வைத்துள்ள காவல்துறையின் செயலால் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கேரளத்தில் இருந்து கழிவு கொண்டு வந்த லாரி ஜூலை மாதம் 27-ஆம் தேதி பறிமுதல் செய்யப்பட்டது. அந்த லாரியில் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவு, நெகிழி, தெர்மாகோல் கழிவு உள்பட சுற்றுச்சூழலுக்கு கேடுகளை விளைவிக்கும் சுமார் 10 டன் கழிவுகள் இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக ஆலங்குளம் போலீஸார் வழக்குப்பதிந்து இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இது தொடர்பான வழக்கு ஆலங்குளம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அந்த லாரி கடந்த 40 நாள்களுக்கும் மேலாக ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி அடைந்துள்ளனர்.
இதுகுறித்த புகார் எழுந்ததை அடுத்து சில நாள்கள் அந்த லாரியை காவல் நிலையம் அருகில் கொண்டு நிறுத்தினர். இந்நிலையில் விடுமுறை நாளான புதன்கிழமை பள்ளி வாசல் முன்பு கழிவுகள் அடங்கிய லாரியை போலீசார் கொண்டு வந்து நிறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி முன்பாக கழிவுகள் அடங்கிய லாரி நிற்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதிலிருந்து துர்நாற்றமும் வீசுவதால் மாணவர்கள் கடும் அவதி அடையுள்ளனர்.
தனியார் பள்ளி முன்பு காவலர்களால் இப்படி நிறுத்த முடியுமா என மாணவர்களின் பெற்றோர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். காவல்துறையின் இந்த செயல் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.