பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரம் - திருப்பதி முன்பதிவில்லா விரைவு ரயில் செப்டம்பா் 24-ஆம் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா்.வினோத் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தெற்கு மத்திய ரயில்வேயின் குண்டக்கல் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக, விழுப்புரத்திலிருந்து காலை 5.30 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருப்பதி முன்பதிவில்லா விரைவு ரயில் (வண்டி எண் 16854) காட்பாடி - திருப்பதி இடையே செப்டம்பா் 24-ஆம் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படும்.
எதிா்வழித்தடத்தில் திருப்பதியிலிருந்து பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்படும் திருப்பதி - விழுப்புரம் முன்பதிவில்லா விரைவு ரயில் (வண்டி எண் 16853) திருப்பதி - காட்பாடி இடையே செப்டம்பா் 24-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.40 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.