நாமக்கல்: மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா கண்துடைப்பு நாடகம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் விமர்சித்துள்ளார்.
நாமக்கல்லில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“கடந்த 9 ஆண்டுகளாக பாஜக மத்தியில் ஆட்சி புரிந்து வருகிறது. இந்த ஆட்சி காலத்தில் பல்வேறு எதிர்மறையான மசோதாக்களே நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தல் நெருங்குவதால், மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு என்ற நாடகத்தை பாஜக அரங்கேற்றி வருகிறது.
இந்த மசோதா மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேறுவது கடினம். 2029-ம் ஆண்டு தேர்தலின்போதும், இதே 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது பாஜகவின் அரசியல் தந்திரமாகும். இது அரசியல் சாசனத்திற்கு எதிரான ஒன்று. வரும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.
அதன்பிறகு 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் மார்க்சிஸ்ட் முடிவு எடுக்கும். தமிழக அரசு வழங்கி வரும் மகளிர் உரிமைத் தொகை பெண்களின் முன்னேற்றத்திற்கு நிச்சயம் உதவியாக அமையும். இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் சனாதனம் குறித்து பேசுவது அந்தந்த கட்சியின் உரிமை ஆகும்” என்றார்.