இபிஎஸ் பல கொலைகளை செய்துள்ளார்: ஜெயலலிதா ஓட்டுநரின் சகோதரர்!

கொடநாடு வழக்குத் தொடா்பான சிபிசிஐடி விசாரணைக்கு முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் காா் ஓட்டுநா் கனகராஜின் சகோதரா் தனபால் இரண்டாவது முறையாஜ இன்று நேரில் ஆஜராகியுள்ளார்.
தனபால்
தனபால்

கோவை: கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்குத் தொடா்பான சிபிசிஐடி விசாரணைக்கு முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் காா் ஓட்டுநா் கனகராஜின் சகோதரா் தனபால் இரண்டாவது முறையாஜ இன்று நேரில் ஆஜராகியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி ஆவணங்கள் மற்றும் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதனை தடுக்க வந்த காவலாளி ஓம்பகதூா் கொலை செய்யப்பட்டாா்.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், வழக்கில் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் பல்வேறு குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருகிறார்.

தனது தம்பி கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழக்கவில்லை, அவா் சாவில் மா்மம் உள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டுமென்றும் தனபால் தெரிவித்து வந்ததால் அவரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸாா் முடிவு செய்தனா்.

இதையடுத்து, கடந்த சில நாள்களுக்கு முன்பாக கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் தனபாலிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் இரண்டாவது முறையாக தனபாலை செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், அவர் ஆஜராகியுள்ளார்.

சிபிசிஐடி விசாரணைக்கு செல்லும் முன்பு அவர் செய்தியாளர்களுக்கு தனபால் அளித்த பேட்டி:

“முதல் கட்ட விசாரணையில் 40 மேற்பட்ட கேள்விகள் கேட்டிருந்தார்கள். இன்று இரண்டாம் கட்ட விசாரணையில் மற்ற கேள்விகளை கேட்க இருக்கின்றனர். கனகராஜ் எடுத்து வந்த பைகள் யாரிடம் கொடுத்தார்கள் என்பது குறித்தும் தெரிவித்துள்ளேன். இதேபோல பல கொலைகளை பழனிசாமி செய்திருக்கிறார். இதுகுறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமி சொல்லிதான் கனகராஜ் இந்த சம்பவங்களை செய்தார். இதை என் தம்பி என்னிடம் சொல்லி இருக்கின்றார்.

இதற்கு முன்னர் விசாரணை நடத்திய அதிகாரியை விலைக்கு வாங்கி விட்டனர். இப்போது நேர்மையான அதிகாரிகள் உள்ளனர். விசாரணை செய்து வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி, இளங்கோவன், தங்கமணி ,வேலுமணி ஆகியோர் கனகராஜை நேரடியாக மூளை சலவை செய்து இந்த விவகாரத்தில் ஈடுபடுத்தினர். எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்தி முன்னே வந்தவர். நேரடியாக எதுவும் செய்யமாட்டார்.

சுதாகர் ஐஜி நடத்திய விசாரணையில் திருப்தி இல்லை. விசாரணையில் என்னை அடித்து துன்புறுத்தினார்கள்.  திமுக ஆட்சியில் உயர் அதிகாரிகள் மட்டும் தான் மாறி உள்ளனர். பிற அதிகாரிகள் இன்னும் எடப்பாடி பழனிசாமிக்குதான் பணி செய்து வருகின்றனர்.

சிபிசிஐடி போலிசார் எத்தனை நாள் விசாரணை நடத்தினாலும் பதில் சொல்ல நான் ரெடியாக இருக்கின்றேன். சென்னையில் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் ஐந்து நாள்கள் கனகராஜை மூளை சலவை செய்தார்கள். அனைத்து உதவியும் செய்வதாக கனகராஜிடம் சொல்லி இருக்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமியை விசாரித்தால் எல்லா உண்மைகளும் தெரியவரும். சென்னையில் உள்ள எடப்பாடி வீட்டில்தான் சதிதிட்டம் போடப்பட்டது. எடப்பாடியுடன் இளங்கோவன், வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் இருந்தனர். எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும். அவரை விசாரிக்க சம்மன் அனுப்ப வேண்டும்” எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com