கர்நாடகத்தில் பந்த்: தமிழக எல்லையில் வாகனங்கள் நிறுத்தம்

கர்நாடகத்தில் பந்த் எதிரொலியாக இன்று காலை முதல் மேட்டூர், கொளத்தூர் வழியாக கர்நாடக மாநிலம் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
கர்நாடகத்தில் பந்த் எதிரொலியாக தமிழக - கர்நாடக எல்லையில் போக்குவரத்து சேவை பாதிப்பால் வெறிச்சோடிய சாலைகள். 
கர்நாடகத்தில் பந்த் எதிரொலியாக தமிழக - கர்நாடக எல்லையில் போக்குவரத்து சேவை பாதிப்பால் வெறிச்சோடிய சாலைகள். 
Published on
Updated on
2 min read

மேட்டூர்: கர்நாடகத்தில் பந்த் எதிரொலியாக இன்று காலை முதல் மேட்டூர், கொளத்தூர் வழியாக கர்நாடகத்திற்குச் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை 18 நாட்களுக்கு தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகத்திற்கு உத்தரவிடப்பட்டது. 

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று(வெள்ளிக்கிழமை) கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு கர்நாடகத்தில் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் பல்வேறு கன்னட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 

இதனால் கர்நாடகம் செல்லும் தமிழக வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் இன்று காலை 6 மணி முதல் மேட்டூரில் இருந்து கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை, மைசூர், கொள்ளேகால் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்தப்பட்டன. 

இன்று பௌர்ணமி என்பதால் கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் உள்ள மாதேஸ்வரன் சுவாமி கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து 50,000-க்கும் அதிகமான பக்தர்கள் சென்று வருவார்கள். கர்நாடகத்தில் நடைபெறும் முழு அடைப்பு காரணமாக அங்கு செல்ல முடியாமலும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாமலும் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். 

இரு மாநில எல்லையான பாலாற்றில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காரைக்காட்டில் தமிழக போலீசார் சோதனைச் சாவடியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

கர்நாடகம் செல்ல வந்த வாகனங்களை காரைக்காடு சோதனைச் சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர். இதனால் மாதேஸ்வரன் மலை செல்ல வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இரு மாநில எல்லையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் தமிழக கர்நாடக எல்லையான பாலாறு வெறிச்சோடி காணப்படுகிறது. பாலாற்றில் உள்ள கர்நாடக வனத்துறை சோதனை சாவடியில் கர்நாடக  போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com