காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் பாலாற்று குடிநீர் குழாய் பழுதானதால் தினந்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் நீர் வீணாகி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் பிரதானமான ஆறாக விளங்கும் பாலாற்றில் இருந்து 30 ஆண்டுகளாக தாம்பரம், பல்லாவரம், கிண்டி உள்ளிட்ட சென்னை பகுதிகளில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக ராட்சச குழாய் அமைக்கப்பட்டு அதன் வழியாக நீர் செல்கிறது.
தாம்பரம் மாநகராட்சி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே மூன்று இடங்களில் ஆழ்துளைக் கிணறு அமைத்து பழையசீவரம் மேலச்சேரி நீரேற்றம் நிலையத்திலிருந்து தினமும் ஒரு கோடி லிட்டர் நீர் எடுக்கப்படுகிறது.
30 ஆண்டுகளுக்கு மேலாக வண்டலூர் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையின் பாலாற்று குடிநீர் குழாய் புதைக்கப்பட்ட இடங்களான ஒரகடம், செரபனஞ்செரி, படப்பை, கரசங்கால், மண்ணிவாக்கம் வழியாக ஆலந்தூர் வரை இந்த நீர் செல்கிறது.
இந்த ராட்சச குழாய் பழுதாகியுள்ளதால் அடிக்கடி பல்வேறு இடங்களில் உடைந்து குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது.
இதனால் படப்பை, ஆரம்பாக்கம், கரசங்கால், செரப்பணசேரி பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக குடிநீர் குழாய் சேதமடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது.
சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தின் அதிகாரிகள் உடனடியாக சேதம் அடைந்த குழாய்களை சரி செய்து குடிநீர் வீணாவதைத் தடுக்க வேண்டும் என சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் பாலாற்று குடிநீர் காஞ்சிபுரம் மக்களுக்கே கிடைக்காத நிலையில் சென்னைக்கு செல்லும் குடிநீர் வீணாகாமல் பயன்படுத்த வேண்டும்என்பது காஞ்சிபுரம் மக்களின் கோரிக்கையாக உள்ளது.