காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் இன்று பந்த் காரணமாக தமிழக - கர்நாடக எல்லையில் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் இடையேயான காவிரி விவகாரத்தில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க கர்நாடகம் மறுத்து வருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 15 வரை 18 நாட்களுக்கு தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகத்திற்கு உத்தரவிடப்பட்டது.
காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று(வெள்ளிக்கிழமை) கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு கர்நாடகத்தில் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள், பல்வேறு கன்னட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதையும் படிக்க | துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம், வெள்ளி
இதனால் தமிழக - கர்நாடக எல்லையில் தமிழக வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
தொடர்ந்து பேருந்து போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக எல்லைகள் வரை மட்டுமே பேருந்து இயக்கப்படுகிறது.
இதனால் தமிழக - கர்நாடகம் இடையே பேருந்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.