
நெல்லை அருகே வீரவநல்லூரில் கோயில் தகராறில் குமார்(40) என்பவர் வியாழக்கிழமை மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் பண்ணையார் குமார் என்கிற குமார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர் சொந்தமாக ஜே.சி.பி., லாரி உள்ளிட்டவை வைத்துள்ளார். மேலும் காண்டிராக்டர் தொழிலும் செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 2 -ஆம் தேதி வீரவநல்லூரில் உள்ள திரௌவபதி அம்மன் கோயில் திருவிழா கால்நாட்டுடன் தொடங்கிய நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் வருகிற வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது.
மனைவியுடன் பண்ணையார் குமார் என்கிற குமார்.
இந்த நிலையில், இந்த கோயிலில் குமாரின் சமுதாய மண்டகப்படி திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. திருவிழாவில் வெடி வெடிக்கும் போது அதே மண்டகப்படியைச் சேர்ந்த சிலருக்கும், குமார் தரப்பினருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வியாழக்கிழமை காலை பண்ணையார் குமார் வீரவநல்லூர் ரயில் நிலையம் அருகேயுள்ள வீற்றிருந்தான் குளத்திற்கு சென்றபோது அதை நோட்டமிட்ட 5 பேர் கொண்ட மர்ம கும்பல் 2 பைக்கில் சென்று குமாரை குளத்தில் துரத்திச் சென்று சரமாரியாக அரிவாளால் தலையில் வெட்டிவிட்டு தப்பியது.
இந்த சம்பவத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே குமார் உயிரிழந்தார்.
தொடர்ந்து இதுகுறித்து தகவலறிந்து சென்ற வீரவநல்லூர் போலீசார், குமார் உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோயில் திருவிழா தகராறு காரணமாக தான் குமார் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் முன்விரோத காரணமா? என பல்வேறு கோணங்களில் வீரவநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...