வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று(வெள்ளிக்கிழமை) காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
தொடா்ந்து இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து டிச. 3-இல் புயலாக மாறும். டிச. 4-ஆம் தேதி வடமேற்கு திசையில் நகா்ந்து வட தமிழகம், தெற்கு ஆந்திர பகுதியில், அதாவது சென்னை - மசூலிப்பட்டினம் இடையே டிச. 4 ஆம் தேதி கரையைக் கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயலுக்கு ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புயல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
அமைச்சர்கள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.