சென்னை மூர்மார்க்கெட் - ஆவடி - திருவள்ளூர் - அரக்கோணம் வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களின் சேவை சீரானது.
சென்னை கடற்கரை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறநகர் பகுதிகளான அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளுக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதன் மூலம் புறநகர் பகுதியில் உள்ள மாணவா்கள், பணியாளா்கள் அதிக எண்ணிக்கையில் பயணிக்கின்றனா். ‘மிக்ஜம்’ புயல் காரணமாக ரயில்வே பாலங்கள் மற்றும் தண்டவாளங்கள் நீரில் முழ்கின.
குறிப்பாக பேசின்பிரிட்ஜ் - வியாசா்பாடி இடையே உள்ள பாலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே செல்வதற்கான முக்கிய பாலமாகும். இதில் அபாய அளவை தாண்டி தண்ணீா் தேங்கியதால் சென்னை வரும் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதையும் படிக்க: 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலராக பதவி உயர்வு!
இந்த நிலையில், தற்போது நிவாரணப் பணிகள் நிறைவடைந்து உள்ளதால் சென்னை மூர்மார்க்கெட் - ஆவடி - திருவள்ளூர் - அரக்கோணம் வழித்தடத்தில் 1 மணி நேர கால இடைவெளியில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.
சென்னை எழும்பூரில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல், கடற்கரை - திருவள்ளூர், அரக்கோணம் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது.