தமிழகத்தின் செங்கல்பட்டு மற்றும் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
செங்கல்பட்டு பகுதியில் வெள்ளிக்கிழமை காலை 7.39 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ.ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 அலகுகளாகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | கர்நாடகாவில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு
இதேபோன்று திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கரும்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை சுமார் 7.38 மணிக்கு திடீரென லேசான நில அதிர்வு உணரப்பட்டது. அந்த பகுதியில் வீட்டில் இருந்த பொருட்கள் திடீரென அதிரும் சத்தம் கேட்டதாகவும், அதேபோல பூமியும் லேசாக ஆடியது போல தாங்கள் உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் கூறினார்கள்.
இதுகுறித்து கரும்பூர் கிராமத்தை சேர்ந்த கே சந்திரசேகர் கூறியதாவது:
வெள்ளிக்கிழமை காலை சுமார் 7.38 மணியளவில் நான் வீட்டில் வேலையாக இருந்தபோது திடீரென பொருட்கள் உருண்டு விழும் சத்தம் அதிரும் சத்தம் கேட்டது.மேலும் நிலமும் லேசாக அதிர்வதை உணர்ந்தேன்.இந்த நில அதிர்வு ஒரு சில வினாடிகள் நீடித்தது.நில அதிர்வை உணர்ந்தவுடன் அச்சத்தின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி வீட்டிற்கு வெளியே நின்று கொண்டோம் என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.