வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயிலுக்கு தைப்பூச நாளில் விவசாயிகள் நெல் மணிகளை கோட்டைக்கட்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று (பிப்.5) நடைபெற்றது.
வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயிலுக்கு திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னலூர் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. இந்த நிலத்தில் குத்தகை முறையில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் முதல் அறுவடையாக செய்யப்படும் நெல்லை கோயிலுக்கு வழங்குவது வழக்கம்.
நெற்கதிர்களை படைக்க ஏற்ற நாளான தைப்பூச நாளில் கோட்டையாக கட்டி கோயிலுக்கு வழங்கும் நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விவசாயிகள் கொண்டுவந்த கோட்டைகள் வேதாரண்யம் மேலவீதியில் உள்ள களஞ்சிய விநாயகர் கோயிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
பின்னர் நாதசுவரம், மேளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று கோயிலில் ஒப்படைத்தனர். கோயிலில் நெல் கோட்டைக்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது. பக்தர்களுக்கு நெல் கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.