
செங்கல்பட்டு மாவட்டம், மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்தப் பல்கலைக்கழகத்தில் இறகுப்பந்து, வாலிபால் மற்றும் மேசைப்பந்து, உள் விளையாட்டு பயிற்சிக் கூடங்கள், உயிர் இயந்திரவியல் ஆய்வகம், சிந்தடிக் ஓடுதளம், தடகளம், கால்பந்து, ஹாக்கி மைதானங்கள், யோகா மையம், நூலகம், ஆராய்ச்சிக் கூடம், கருத்தரங்கக் கூடம், தியான மண்டபம் மற்றும் மாணவ, மாணவியர் தங்கும் விடுதிகள் ஆகியவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, விடுதி மாணவர்களிடம் வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, மாணவ, மாணவியருக்கு எவ்வித குறையுமின்றி அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் எனவும், விளையாட்டு மைதானங்கள் மற்றும் உள் விளையாட்டு பயிற்சிக் கூடங்களை நல்ல முறையில் பராமரித்திடவும், பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கிடவும், ஒவ்வொரு மாணவர்களையும் தலைசிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்குகின்ற வகையில் முறையான பயிற்சி அளித்திட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், மாணவர்கள் அனைவரும் விளையாட்டுப் பயிற்சியுடன் கல்வியிலும் முழுக்கவனம் செலுத்தி சிறந்து விளங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் .ஜெ. மேகநாத ரெட்டி, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் சுந்தர், பதிவாளர் (பொ) முனைவர் ராமகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.