நீடாமங்கலம்: நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வைகுந்த ஏகாதசி விழாவவை முன்னிட்டு பரமபதவாசல் திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர் பிரதாபசிம்மரால் கி.பி.1761ல் இக்கோயில் கட்டப்பட்டது.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சதரால் பாடல் பெற்றது. புத்திரபாக்கியம் இல்லாவர்கள் சந்தானகோபால ஜெபம் செய்து சீதா,லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமரை மனமுருகி வேண்டினால் அப்பேற்றினை அடைவார்கள் என்பது ஐதீகம். வரலாற்றுச்சிறப்புமிக்க இக்கோயிலில் வருடம் தோறும் வைகுந்த ஏகாதசிவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது.
இவ்வாண்டும் வைகுந்த ஏகாதசி விழாவை முன்னிட்டு திருஅத்யயன பகல்பத்து உற்சவம் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 1 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற்றது. திங்கள்கிழமை இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு சீதா, லெட்சுமண,அனுமன் சமேத சந்தானராமர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்களை சொல்லியும், நாலாயிர திவ்யபிரபந்த பாராயணம் செய்தும் நடந்த பரமபதவாசல் திறப்பில் அதிகாலை சீதா, லெட்சுமணர் சமேதராக சந்தானராமர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு அர்ச்சனைகளை செய்து வைத்து பக்தர்களுக்கு பிரசாதங்களை அர்ச்சகர் நாராயணன் வழங்கினார்.
திங்கள்கிழமை இரவு ராபத்து உற்சவம் தொடங்கி வரும் ஜனவரி 11 ஆம் தேதி புதன்கிழமையுடன் நிறைவடைகிறது. அன்றையதினம் ராமர் பட்டாபிஷேக அலங்காரம் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் மணிகண்டன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
அபயவரதராஜப் பெருமாள்:
இதேபோல் ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா நடைபெற்றது. பரமபதவாசல் திறப்பில் ஶ்ரீதேவி, பூமாதேவி சமேத அபயவரதராஜப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நீடாமங்கலம் லெட்சுமி நாராயணப்பெருமாள் கோயிலிலும் வைகுந்த ஏகாதசி விழா நடைபெற்றது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.