பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

பெண்கள் பாதுகாப்பாக பணிபுரியும் நகரங்களின் பட்டியல்! சென்னை முதலிடம்!

10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்திய நகரங்களின் பட்டியலில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. 

News image
Updated On :7 ஜனவரி 2023, 8:56 am

பெண்கள் பாதுகாப்பாக பணிபுரிய சிறந்த நகரங்களின் பட்டியலில் நாட்டில் சென்னை முதலிடம் வகிப்பதாக அவதார் குழுமம் நடத்திய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. 

10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்திய நகரங்களின் பட்டியலில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. 

பெண்களின் வேலைவாய்ப்பிற்கு உகந்த சுற்றுச்சூழலை வளர்க்கும் நகரங்களைக் கண்டுப்பிடிக்கும் இந்த ஆய்விற்காக 111 நகரங்களில் உள்ள 300 நிறுவனங்களில் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

பெண்கள் தற்போதைய எளிதான வாழ்க்கைக் குறியீடு, தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, குற்றப் பதிவுகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆண்டறிக்கை உட்பட 200க்கும் மேற்பட்ட தரவுகளின் ஒருங்கிணைப்பாக இந்த அறிக்கை வெளியாகி உள்ளது.

முதலிடத்தில் சென்னை

பெண்களின் பாதுகாப்பாக பணிபுரிய உகந்த நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. அடுத்தபடியாக புணே, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, அகமதாபாத், விசாகப்பட்டணம், கொல்கத்தா, கோவை, மதுரை ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன. 

சென்னை பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான நகரமாக மட்டுமல்லாமல், அதிக அளவிலான பெண்கள் பணிபுரியும் நகரமாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புணேவில் அதிக அளவிலான பெண்கள் தனியாக தங்கியிருந்து பணிபுரிந்து வருகின்றனர். 

முதலிடத்தில் திருச்சி 

இதேபோன்று 10 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்களின் பட்டியலிலும் பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான நகரங்கள் குறித்து அவதார் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. 

அதன்படி திருச்சி பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக வேலூர், ஈரோடு, சேலம், திருப்பூர், புதுச்சேரி, ஷிம்லா, மங்களூரு, திருவனந்தபுரம், பெலகாவி ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன. 

இது தொடர்பாக அவதார் குழுமத்தின் நிறுவனர் – தலைவர் டாக்டர் சவுந்தர்யா ராஜேஷ் பேசியதாவது, ஹூப்ளி, நாக்பூர், அகமதாபாத், கோவை போன்றவை பெண்களின் பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கான நம்பிக்கைக்குரிய மையங்களாக தற்போது உயர்ந்துள்ளன. தில்லி மற்றும் கொல்கத்தா போன்ற பெருநகரங்கள் இந்த பட்டியலில் பின்தங்கியுள்ளன. பாதுகாப்பு ஒரு முக்கிய பிரச்னையாக இருந்தாலும், வேலைவாய்ப்பை தொடர முடியாத சூழல் அங்கு இருப்பதே அதற்கு காரணம் எனக் குறிப்பிட்டார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.