கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் மூதாட்டி தற்கொலைக்குக் காரணமானவர்களை கைது செய்யக் கோரி அவரது உறவினர்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் கம்பம் 1 ஆவது வார்டு கோம்பைச் சாலையைச் சேர்ந்தவர் மாசாணம், இவரது மனைவி ராசாத்தி (72). இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கும் அடிக்கடி வாய்த்தகராறு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு ராசாத்தி அம்மாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மேற்கூரையில் மின்சார காற்றாடியில் சேலையை மாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதைப்பார்த்த குடும்பத்தினர் மூதாட்டியை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசார் ராசாத்தி உடலை உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
ராசாத்தி அம்மாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் அருகே உள்ள வீட்டுக்காரர்கள்தான் காரணம் என்றும் அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி அரசு மருத்துவமனை பிரதான சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ஆர்.லாவண்யா சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடற்கூறு பரிசோதனைக்குப் பின்னர் முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கம்பம் - கூடலூர் சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து தடைபட்டது.