சென்னை: தமிழகத்தில் பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லையே என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. சாலிகிராமத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்துக்கு வந்த பெண் காவலருக்கு திமுகவினர் பாலியல் தொல்லை அளித்துள்ளனர். பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண் காவலரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார்.
இதையும் படிக்க.. குடும்பங்களை ஈர்க்கிறதா வாரிசு? திரை விமர்சனம்
இதற்கு பதிலளித்த மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் உரிய நடைமுறையை பின்பற்றி எதிர்க்கட்சித் தலைவர் பேச வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியின் சட்டம் - ஒழுங்கு எப்படி இருந்தது என்பது குறித்த பட்டியல் உள்ளது என்று கூறினார்.
மேலும், பெண் காவலரிடம் அத்துமீறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் உறுதி அளித்தார். கட்சி பாகுபாடு இல்லாமல் நடவடிக்கை எடுப்பது திமுக ஆட்சிதான் என்றும் கூறினார்.
முதல்வரின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர், பிறகு அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசுகையில், தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி என நாள்தோறும் செய்திகள் வருகின்றன.. தினமும் நாளிதழ்களில் வந்த செய்திகளைத்தான் பேரவையில் சுட்டிக்காட்டினேன். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது, மாணவர்கள், இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
பெண் காவலருக்கே பொதுகாப்பு அளிக்காத திமுக அரசு, தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு அளிக்க முடியும்?
பெண் காவலர் மீதான பாலியல் தொல்லை விவகாரத்தில் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பெண் காவலர் புகார் கூறியும், விசாரணை நடத்திய பிறகுதான் நடவடிக்கை என்று டிஜிபி கூறியிருக்கிறார் என்று பழனிசாமி கூறினார்.