சேலம் காடையாம்பட்டி அருகே இரண்டு சொகுசு கார்கள் நேருக்கு நேர் மோதி, கார் தீப்பற்றிய நிலையில், காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினர்.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள எலத்தூர் என்ற பகுதியில் வசிக்கும் முரளி என்பவருடைய சொகுசு காரில் அவரது உறவினர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது சேலத்தில் இருந்து பெங்களூரு நோக்கி குழந்தை உள்பட நான்கு பேர் பயணித்த சொகுசு கார் மற்றொரு கார் மீது எதிர்பாராத விதமாக பலமாக மோதியது. இதில் சேலத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற கார் தீப்பிடித்து எரிந்தது.
இதையடுத்து, பொதுமக்கள் அந்த காரை தண்ணீர் கொண்டு அணைக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள் அணைக்க முடியாததால் காடையாம்பட்டி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து காரில் எரிந்து கொண்டிருந்த தீயை முழுவதும் அமைத்தனர். இதில் குழந்தை உள்பட நான்கு பேர் பயணம் செய்த நிலையில் அனைவரும் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.
அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற சொகுசு கார் முன் பகுதி நொறுங்கி சேதமடைந்தது. இந்த கோர விபத்தில் அனைத்து பயணிகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்
இரண்டு கார்கள் மோதிய விபத்தில் சேலம் - பெங்களூரு, பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து போக்குவரத்து பாதுகாப்பு காவல்துறையினரும், தீவட்டிப்பட்டி காவல்துறையினரும் இணைந்து தீப்பிடித்து எரிந்த கார் உள்பட இரண்டு கார்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.