வாழப்பாடி அருகே காணும் பொங்கலன்று நடைபெற்ற பேய் விரட்டும் வினோத திருவிழா நடைபெற்றது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பொன்னாரம்பட்டி கிராமத்தில், தமிழகத்தின் வேறெந்த பகுதியிலும் இல்லாத வினோதமாக, காணும் பொங்கல் தோறும், முன்னோர்களின் வழியில் பேய் விரட்டும் திருவிழா நடந்து வருகிறது. திருமணம் கைகூடி நல்ல வரனும், குழந்தை பாக்கியம் கிடைக்குமென நம்பிக்கை தொடர்ந்து வருவதால், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த வினோத விழாவில் ஏராளமான பெண்கள் காட்டேரி வேடமிட்ட பூசாரிகளிடம் முறத்தடி வாங்கி பேய் விரட்டிக் கொண்டனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி கிராமங்களில் பொங்கல் பண்டிகை தருணத்தில் எருதாட்டம், மஞ்சுவிரட்டு மற்றும் பானை உடைத்தல், வழுக்கு மரமேறுதல், சடுகுடு, கபடிப் போட்டி உள்ளிட்ட பாரம்பரியத்தை பறைச்சாற்றும் விளையாட்டுகள் மட்டுமின்றி, கால்நடைகள் ஊர்வலம், வங்காநரி ஜல்லிக்கட்டு ஆகிய வினோத நிகழ்வுகளும் நடந்து வருகிறது.
வித்தியாசமான திருவிழாக்கள், வியப்பூட்டும் வழிப்பாட்டு முறைகளுக்கு பெயர் பெற்ற வாழப்பாடி பகுதியிலுள்ள பொன்னாரம்பட்டி கிராமத்தில், இந்த அதிநவீன காலத்திலும் காணும் பொங்கல் தோறும் நடந்தேறி வரும் பேய் விரட்டும் திருவிழா குறிப்பிடத்தக்கதாகும்.
பொன்னாரம்பட்டி கிராமத்தில் காணும் பொங்கலன்று பேய் விரட்டும் விழா நடத்துவதற்காவே பரம்பரை உரிமை கொண்ட பூசாரி குடும்பத்தினர், பொங்கல் பண்டிகை துவங்குவதற்கு முன்பே, அசைவ உணவு மறுத்து, காலணிகள் தவிர்த்து விரதமிருக்கின்றனர்.
காணும் பொங்கல் தினத்தன்று பேய் விரட்டுவதற்காக முன்னோர்கள் வடிவமைத்துக் கொடுத்த கருப்பு நிற ஆடையை அணிந்துக் கொண்டு காட்டேரி வேடம் அணிந்து, மேள வாத்தியம் முழங்க, பூசாரிகள் ஆற்றங்கரைக்கு செல்வார்கள். அங்கு கூடியிருக்கும் பெண்களை அழைத்து தலைமுடியை கையில் பிடித்துக் கொண்டு மூங்கில் தப்பையால் முடையப்பட்ட முறத்தால் தலையில் 3 முறை அடிப்பார்கள். பிறகு நெற்றியில் விபூதி வைத்து அனுப்பி விடுவார்கள்.
விரதமிருந்து சிறப்பு பூஜை வழிபாடு நடத்திய பிறகு பேய் விரட்டும் காட்டேரி வேடமிட்ட இந்த பூசாரிகளிடம் முறத்தடி வாங்கினால், திருமணம் விரைவாக கைகூடி நல்ல வரனும், குழந்தை பாக்கியம் கிடைக்குமென நம்பிக்கை தொடர்ந்து வருகிறது.
காணும் பொங்கல் தினமான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த வினோத விழாவில், ஏராளமான பெண்கள் தானாக முன்வந்து வரிசையில் நின்று காத்திருந்து, பூசாரியிடம் முறத்தடி வாங்கி பேய் விரட்டிக் கொண்டனர்.
தமிழகத்தின் வேறெந்த பகுதியிலும் இல்லாத வகையில், வாழப்பாடி அடுத்த பொன்னாரம்பட்டி கிராமத்தில் காணும் பொங்கல் தோறும் தவறாமல் நடந்து வரும் இந்த பேய் விரட்டும் திருவிழாவைக் காணவும், பேய் விரட்டிக் கொள்ளவும் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பெண்கள் கூடியிருந்தனர்.
இதுகுறித்து பொன்னாரம்பட்டியைச் சேர்ந்த பெண்கள் சிலர் கூறியதாவது:
எங்களது கிராமத்தில் ஆண்டு தோறும் காணும் பொங்கலன்று பேய் விரட்டும் விழா தொடர்ந்து நடந்து வருகிறது. விரதமிருந்து சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்யும் பூசாரிகள் முறத்தால் அடிப்பதால், தனக்குள் இருந்த குழப்பமான எதிர்மறை எண்ணங்கள் மறைந்து, புத்துணர்வும் தன்னம்பிக்கையும் ஏற்படுகிறது.
இதுமட்டுமின்றி, திருமணம் கைகூடி, நல்ல வரனும், குழந்தை பாக்கியமும் கிடைக்குமென்ற நம்பிக்கையும் தொடர்ந்து வருகிறது. இதனால் வெளியூரில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பெண்களும், காணும் பொங்கலன்று சொந்த கிராமத்திற்கு வந்து பூசாரிகளிடம் சென்று பேய் விரட்டிக் கொள்கின்றனர் என்றனர்.