நாமக்கல்: நாமக்கல்லில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் பலப்பட்டரை மாரியம்மன் கோயில் கட்டப்பட்டுள்ளதால், நீதிமன்ற உத்தரவின்பேரில் கோயிலின் ஒரு பகுதி செவ்வாய்க்கிழமை காலை இடிக்கப்பட்டது.
நாமக்கல் கடைவீதி அருகில் பிரசித்தி பெற்ற பலப்பட்டரை மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் வடக்கு பகுதி பாப்பாயி என்பவருக்கு சொந்தமானதாகும். அவர் தனது இடத்தை மீட்டுத் தரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நீதிமன்றமும் இரண்டு மாதத்திற்குள் இடத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. அதன்படி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் நகராட்சி, வருவாய்த்துறை, காவல்த்துறை, அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் பொக்லைன் இயந்திரம் கொண்டு கோயிலின் குறிப்பிட்ட பகுதிகள் இடித்து அகற்றப்பட்டன.
முருகன் மற்றும் சுவாமி சிலைகள் அகற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டன. மாரியம்மன் கோயில் இடிக்கப்படும் தகவல் அறிந்து பக்தர்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோயிலை சுற்றிலும் பாதுகாப்புப் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர்