ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா போட்டியிடுவார் என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 7ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
திமுக கூட்டணி சாா்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
இடைத்தோ்தலில் அதிமுக போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் வேட்பாளா் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. வேட்பாளா் தோ்வு நடைபெற்று வருகிறது. அதேசமயம் தேமுதிக, அமமுகவும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி தோ்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.
இதையும் படிக்க- கல்வியும் மருத்துவமும் சேவைத் துறைகள்: முதல்வர் ஸ்டாலின்
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா போட்டியிடுவார் என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அறிவித்துள்ளார். காங்கிரஸ், தேமுதிக, அமமுகவைத் தொடர்ந்து தற்போது நாம் தமிழர் கட்சியும் வேட்பாளரை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.