

ஈரோடு: பயிற்சி அகாதெமி செயல்பட அனுமதி வழங்காததைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் துப்பாக்கி சுடும் வீரர் புதன்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பெருந்துறை அருகே காடபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் இலக்கியச் செல்வன். தேசிய அளவில் துப்பாக்கி சுடும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார்.
இதனிடையே ஈரோட்டில் துப்பாக்கி சுடும் விளையாட்டு வீரர்களுக்காக கடந்த 2018 ஆம் ஆண்டு அகாதெமியைத் தொடங்கினார். இந்த அகாதெமி பதிவு செய்யப்பட்டு தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்கத்தாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த அகாடமி நடைமுறையில் செயல்பாட்டிற்கு வரவில்லை என கூறப்படுகிறது. அகாதெமியை செயல்படுத்த இலக்கியச் செல்வன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அதற்கு அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் அவரின் துப்பாக்கி உரிமத்தை கடந்த 10 மாதங்களாக புதுப்பிக்காமல் அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாகவும் புகார் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் புதன்கிழமை காலை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த இலக்கியச் செல்வன் திடீரென ஆட்சியர அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன், முன்னாள் எம்எல்ஏ ஆர்.எம்.பழனிசாமி உள்ளிட்டோர் போராட்டத்திற்கு ஆதரவாக பங்கேற்றனர்.
இதுகுறித்து இலக்கியச் செல்வன் கூறியதாவது: மதுரையில் வரும் 11 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஈரோடு மாவட்டத்திலிருந்து அகாதெமி சார்பில் வீரர், வீராங்கனைகளை அனுப்ப வேண்டும். அதற்கு உடனடியாக அகாதெமியை புதுப்பித்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். மேலும் எனது விளையாட்டு வாழ்க்கையை சீர்குலைக்க அதிகாரிகள் முயற்சிக்கின்றனர். அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அப்போது அங்கு வந்த ஈரோடு சூரம்பட்டி காவல் ஆய்வாளர் கோமதி, தர்னா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயற்சி செய்தார். இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கு வந்த டவுன் டிஎஸ்பி ஆறுமுகம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் ஆட்சியரை சந்தித்து பிரச்னைகளை தீர்க்கலாம் என போலீஸார் அவரை அழைத்துச் சென்றனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.