அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பதிலாக கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக முத்துசாமியை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மாரடைப்பு காரணமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய நீதிமன்றக் காவலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளும் நீதிமன்றங்களில் விசாரணையில் இருந்து வருகின்றன. தற்போது செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த நிலையில் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக அவருக்கு பதிலாக முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமியை கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அரசாணை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு அமைச்சர்கள் சிலரை சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து அந்தந்த மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துதல், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணித்தல், இயற்கை சீற்றம், நோய் தொற்று மற்றும் அவசர காலப் பணிகளை மேற்கொள்ள வருவாய் மாவட்ட வாரியாக அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி தற்போது கோவை மாவட்டத்திற்கு, தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர்களாக ராமச்சந்திரன், செந்தில் பாலாஜி ஆகியோர் இருந்தது குறிப்பிடத்தக்கது.