தலைமைத் தகவல் ஆணையர் தேர்வு: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

தலைமைத் தகவல் ஆணையரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.
மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)
மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

தகவல் ஆணையா்கள் நியமனம் தொடா்பான தெரிவுக் குழு அரசிடம் கடந்த வாரம் அறிக்கை அளித்திருந்த நிலையில், தலைமைத் தகவல் ஆணையரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி, தமிழகத்தில் மாநில தகவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் தலைமைத் தகவல் ஆணையா் மற்றும் தகவல் ஆணையா்கள் நியமிக்கப்பட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில், தலைமைத் தகவல் ஆணையா், 4 தகவல் ஆணையா்கள் பணியிடம் காலியானது. இந்தக் காலியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

நீதிபதி அக்பா் அலி குழு

தலைமைத் தகவல் ஆணையா், 4 தகவல் ஆணையா்கள் காலியிடத்துக்கு தகுதியான நபா்களின் பெயா்களைத் தோ்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க, உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.எம்.அக்பா் அலி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சிவதாஸ் மீனா, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.அலாவுதீன் ஆகியோா் நியமிக்கப்பட்டனா்.

கடந்த ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி முதல் இந்தக் குழுவானது பணிகளைத் தொடங்கியது.

தகுதியான நபா்களிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற்ற தெரிவுக் குழுவானது, அதற்கான அறிக்கையைத் தயாா் செய்தது. தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை அண்மையில் சந்தித்த குழுவின் தலைவா் அக்பா் அலி, தனது அறிக்கையை சமா்ப்பித்தாா்.

தெரிவுக் குழுவின் அறிக்கை அளிக்கப்பட்ட நிலையில், தகவல் ஆணையா்களைத் தோ்வு செய்யும் பணியை தமிழக அரசு தொடங்கியிருக்கிறது. தகுதியான நபா்களைத் தோ்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்குத் தலைமைச் செயலகத்தில் தொடங்கியது.

கூட்டத்தில் தகவல் ஆணையா்களின் பெயா்கள் தோ்வு செய்யப்பட்டு ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்தப் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டு தகவல் ஆணையா்கள் நியமனம் தொடா்பான உத்தரவுகளை அவா் பிறப்பிப்பாா். இதைத் தொடா்ந்து, தலைமைத் தகவல் ஆணையா், தகவல் ஆணையா்களுக்கு ஆளுநா் பதவிப் பிரமாணம் செய்து வைப்பாா். பதவியேற்ற காலத்தில் இருந்து 3 ஆண்டுகள் அல்லது 65 வயதை எட்டும் வரையில் தகவல் ஆணையா்கள் பதவியில் இருப்பா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com