சென்னை அண்ணா சாலை அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து நினைவுப் பரிசாக புத்தகங்களை வழங்கினார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தியில், 'மார்ச் 8-ஆம் நாளான உலக மகளிர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (8.3.2023) முகாம் அலுவலகத்தில் சந்தித்த காவல் துறை இயக்குநர்கள் முதல் காவலர்கள் வரையிலான பெண் காவல்துறையினர் மற்றும் முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு தனது மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு, அவர்களுக்கு பரிசாக மரக்கன்றுகளை வழங்கினார்.
இந்த நிகழ்வின்போது, காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, இ.கா.ப., சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இ.கா.ப., முதலமைச்சரின் பாதுகாப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஆர். திருநாவுக்கரசு இ.கா.ப., ஆகியோர் உடனிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, சென்னை, அண்ணா சாலையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று, அங்கு பணிபுரியும் பெண் காவலர்களுக்கு மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து, நினைவுப் பரிசாக புத்தகங்களை வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இ.கா.ப., மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிக்க | உலக மகளிர் நாள்: எப்போது தொடங்கியது? ஏன்?