நாகப்பட்டினம்: உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் மேகாலய மாநில முதல்வர் கன்ராட் கே சங்மா குடும்பத்தினரோடு பிரார்த்தனை செய்தார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் மேகாலய மாநில முதல்வர் கன்ராட் கே சங்மா செவ்வாய்க்கிழமை புனித ஆரோக்கிய மாதாவை தரிசனம் செய்தார்.
இதையும் படிக்க.. இது எந்த ரயில் நிலையம்? கேட்பது இந்திய ரயில்வேதான்
தில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர், பின்னர் சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வருகை தந்து அங்கிருந்து சாலை வழியாக காரில் வேளாங்கண்ணி வருகை புரிந்தார். அவருக்கு பேராலய அதிபர் இருதயரஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பேராலயத்தில் மனைவி மெஹ்தாப், தாய், சகோதரர் மற்றும் குடும்பத்தினருடன் மேகாலய மாநில முதல்வர் கான்ராட் கே சங்மா மாதாவை தரிசனம் செய்தார்.
பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் பங்குத்தந்தைகள் அவருக்கு புனித நீர் தெளித்து ஆசீர்வாதம் செய்தனர். தொடர்ந்து மனைவியுடன் சேர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் கலந்துகொண்டனர். அவர்களுக்கு பேராலயம் சார்பில் மாலை சுற்றப்பட்ட மெழுகுவர்த்தி பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதையும் படிக்க.. ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநருக்கு அடுத்த கௌரவம்
அதனை தொடர்ந்து தரிசனத்தை முடித்த மேகாலய முதல்வர், சாலை மார்க்கமாக திருச்சி விமான நிலையம் சென்று பின்னர் அங்கிருந்து, விமானம் மூலம் பெங்களூரு செல்ல இருக்கிறார்.
மேகாலய மாநில முதல்வரின் வருகையை அடுத்து நாகை மாவட்ட காவல்துறை சார்பாக வேளாங்கண்ணி பேராலயத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.