
தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,
வட தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை உருவாகியுள்ளது. இது நாளை(மே 9ல்) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மே 10-ம் தேதி தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக மேலும் வலுப்பெறக்கூடும்.
இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மே 11-ம் தேதி நிலவக்கூடும். அதன் பிறகு வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி வங்கதேசம் - மியன்மார் கடற்கரை நோக்கி நகரக்கூடும்.
மே 8(இன்று) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
படிக்க: வெறுப்பை உமிழும் தி கேரளா ஸ்டோரி - திரைவிமர்சனம்
தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தென்காசி, விருதுநகர், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிப்பு
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கு..
மே 8-ல் குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
படிக்க: பிளஸ் 2 தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து திண்டுக்கல் மாணவி சாதனை!