
கெங்கையம்மன் கோயில் திருவிழாவில் எதிர்பாராத விதமாக பட்டாசு வெடித்ததில் சிறுமி உட்பட 5 பேர் காயமடைந்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் பகுதியில் உள்ள கெங்கை அம்மன் கோயிலின் சிரசு திருவிழா நேற்று (15.05.2023) நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமல்லாத பல்வேறு மாநிலங்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
முன்னதாக காலை தரணம்பேட்டை பகுதியில் உள்ள முத்தியாலம்மன் கோயிலில் இருந்து அம்மனின் சிரசு (தலை) ஊர்வலமாக கொண்டு வந்து கோபாலபுரம் கெங்கையம்மன் கோயிலில் உள்ள உடலில் பொருத்தப்பட்டது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்களுக்கு அருள் பாலித்த கெங்கை அம்மன் சிரசு இரவு 8 மணிக்கு கெங்கையம்மன் உடலில் இருந்து சிரசு பிரித்தெடுக்கப்பட்டு ஊர்வலமாக சலவன் துரைக்கு எடுத்து செல்லப்பட்டது.
சிரசு திருவிழாவையொட்டி கவுண்டன்ய ஆற்றில் பிரம்மாண்டமான வண்ணமயமான வானவேடிக்கைகள் நடைபெற்றது. வானவேடிக்கையை பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு, மக்கள் இருந்த பக்கம் விழுந்து வெடித்ததில் 13 வயது சிறுமி உட்பட 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
இதையும் படிக்க: செயற்கை நுண்ணறிவால் வேலையிழப்பு ஏற்படாது:ஐஐடி இயக்குநா் காமகோடி உறுதி
மேலும் படுகாயம் அடைந்த சிறுமி மட்டும் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...