
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேவுள்ள சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 22 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையை கண்காணிக்க சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
திவாலான தனது தொழிற்சாலையிலிருந்து 1,200 லிட்டர் கள்ளச்சாராயத்தை தொழிலதிபர் அதிபர் இளையநம்பி விற்றுள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த ராஜா, ஏழுமலை ஆகியோருக்கு இந்த விஷச்சாராயம் விற்கப்பட்டுள்ளது.
1,200 லிட்டர் கள்ளச்சாராயத்தை வாங்கிய அவர்கள், அதில் 5 லிட்டரை மரக்காணத்திலும், 3 லிட்டரை சித்தாமூரிலும் விற்றுள்ளனர். அதைக் குடித்தவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையிலான 6 தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து அவர்களிடம் மீதமிருந்த 1,192 லிட்டர் கள்ளச்சாராயத்தை 48 மணி நேரத்தில் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.