அதிமுக ஒன்றிணையாவிட்டால் தேர்தலில் ஜீரோ: முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் பேட்டி 

அதிமுக ஒன்றிணைந்தால் வரும் மக்களவைத் தேர்தலில் ஹீரோ; இல்லாவிட்டால் ஜீரோ என சனிக்கிழமை சேலத்தில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒன்றிணையாவிட்டால் தேர்தலில் ஜீரோ: முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் பேட்டி 



சேலம்: அதிமுக ஒன்றிணைந்தால் வரும் மக்களவைத் தேர்தலில் ஹீரோ; இல்லாவிட்டால் ஜீரோ என சனிக்கிழமை சேலத்தில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகர் பேலஸ் தியேட்டர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சார்பில் சேலம் மாநகர் மாவட்ட செயல்வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் தினேஷ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது சேலத்தில் நடைபெற இருக்கும் மாநாட்டை சிறப்பாக நடத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைத்தியலிங்கம் இரட்டை இலை சின்னத்தையும், கொடியையும் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றத்தில் கூறியுள்ளனரா?, தற்காலிகமாக இரட்டை இலை சின்னம் இபிஎஸ் அணிக்கு நீதிமன்ற தீர்ப்புக்கு உள்பட்டு கொடுத்து இருக்கிறார்கள். நீதிமன்ற தீர்ப்பு அடுத்த மாதம் வர உள்ளது. அதுவரை கொடியையும், இரட்டை இலை சின்னம் பயன்படுத்துவதையும் யாராலும் தடுக்க முடியாது.

அதிமுக ஒன்று பட வேண்டும். அதுதான் எங்களின் எண்ணம். இபிஎஸ்-க்கு மீண்டும் ஆட்சிக்கு வரும் எண்ணம் இல்லை. தான் சம்பாதித்த பணத்தை காப்பாற்ற அதிமுகவை கேடயமாக பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார். எடப்பாடியிடம் இருக்கக்கூடிய மாவட்ட செயலாளர்கள் இடையே புரட்சி வெடிக்க போகிறது. நிச்சயமாக நாங்கள் ஒன்றிணைவோம். எடப்பாடி பழனிசாமி எங்களுடன் வந்தால் அவரையும் சேர்த்து ஒன்றிணைவோம். தங்களுடன் ஒன்றினையாவிட்டால் எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்கிவிட்டு அதிமுகவை வலுப்படுத்துவோம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளோம். கூடிய விரைவில் சேலம் மாநாடு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். தேதி அறிவிக்கும் நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் மாநாட்டை நடத்தி முடிப்போம். அதிமுக மதுரை மாநாட்டிற்கு முன்னால் சேலம் மாநாடு நடைபெறும் என்று தெரிவித்தார்.

மேலும், ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனை வல்லவர் என்றும் இவருக்கு வாக்களியுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். பிறகு தேர்தல் நின்றது. டிடிவி தினகரனை கட்சியிலிருந்து நீக்கினார். அரசியலில் பிரிந்து செல்வதும், இணைவதும் சகஜமான ஒன்று. அதுபோல கட்சியின் நலன் கருதி அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

கட்சியில் சுயநலம் என்றால் எடப்பாடி நினைப்பது போல் இணையாமல் போகலாம். ஆனால் நாங்கள் நினைப்பது இணைய வேண்டும் என்பதுதான். அனைவரையும் ஒன்றிணைத்தாள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தான் இருக்கும். பொதுச் செயலாளர் பதவி இருக்காது. சட்ட விதிப்படி நிரந்தர பொதுச் செயலாளர் அம்மா தான். 

ஓபிஎஸ் சொன்னது போல சசிகலாவை சந்திப்பார். சசிகலா மீண்டும் கட்சிக்கு வந்தாலும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் என்றும், எடப்பாடி பழனிசாமி எங்களுடன் இணைந்தால் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பார்கள்.


சசிகலா மீண்டும் கட்சியில் இணைந்தால் ஓபிஎஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இணைந்து மக்களின் நலன் கருதி பதவி குறித்து முடிவெடுப்பார்கள்.

திருச்சி மாநாட்டில் மூன்று லட்சம் பேரை ஒன்றிணைத்து தொண்டர்கள் எங்கள் பக்கம் என்று நிரூபித்தோம். தொண்டர்களிடையே கடுமையான எழுச்சி இருந்தது. கொங்கு மண்டலத்தில் அதேபோன்று எழுச்சியை சேலத்தில் காட்ட வேண்டும் என்பதை நிரூபிக்கும் நிகழ்ச்சியாக அமையும். 

எடப்பாடியில் கூட்டம் நடத்த சென்றபோது காவல்துறையினரின் ஆதரவுடன் கட்சி கொடி கட்டுவதை தடுத்து இருக்கிறார்கள். எங்களை மிரட்டுவது தொடர்ந்தால் எடப்பாடி பழனிசாமி எந்த பகுதிக்கும் செல்ல முடியாது. எங்களால் எதையும் செய்ய முடியும். ஆனால் ஜனநாயக முறைப்படி எதிர்க்கட்சியாக எங்களது கருத்துக்களை கூறுங்கள். ஆனால் உங்கள் ஊருக்கு வரும்போது 10 பேர்களை வைத்து பயமுறுத்த ஒரு முன்னாள் முதல்வர் நினைப்பது அவருக்கான அழகும் இல்லை, தகுதி இல்லாமல் முதல்வராக இருந்து விட்டார் என்பதுதான். எதையும், எடப்பாடியையும் சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். அதிமுக ஒன்றிணைந்தால் நாடாளுமன்றத் தேர்தலில் ஹீரோ இல்லையென்றால் ஜீரோ தான் வரும் என்று வைத்தியலிங்கம் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com