நாமக்கல்: நாமக்கல்லில், கள்ளச்சாராய இறப்புகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து அதிமுக சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் உழவர் சந்தை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான பி. தங்கமணி பேசியதாவது:
கள்ளச்சாராயம, போலி மதுபானங்களால் 20-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இறந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குகிறது திமுக அரசு. ஆனால் சாலை விபத்திலோ, பட்டாசு விபத்திலோ இறந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் மட்டுமே வழங்குகின்றனர். கள்ளச்சாராய விற்பனைக்கு இந்த அரசு துணை போகிறது.
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஏற்படும் வகையில் ஆங்காங்கே கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுகிறது. மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திமுக ஆட்சியில் ஊழல் முறைகேடுகள் அதிகரித்துவிட்டன. அத்துறை அமைச்சரே ரூ. 30 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றதாக தெரிவிக்கிறார்.
வரும் மக்களவைத் தேர்தலில் திமுக அரசுக்கு உரிய பாடம் புகட்ட வேண்டும் என்றார்.
இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.