தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நியமிக்கும் பொருட்டு தேர்தல் பொறுப்பாளர்களை நியமிக்க மாநில பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக இடையே கூட்டணி முறிவு ஏற்பட்டதையடுத்து அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் கூட்டணியை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்து வருவதாகக் கூறப்பட்ட நிலையில், இனி கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமிக்க தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க | ஜெகத்ரட்சகன் தொடா்புடைய இடங்களில் 3 ஆவது நாளாக தொடரும் சோதனை
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட, மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அதன்படி, 10 நாள்களுக்குள் ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொருட்டு தேர்தல் பொறுப்பாளர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பொறுப்பாளர்கள், தங்கள் தொகுதிகளில் சிறப்பாக செயல்படும் பாஜக நிர்வாகிகளின் பட்டியலை தயாரித்து, அந்த பட்டியல் தேசிய தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலமாக தமிழ்நாட்டில் பாஜக, அதிமுக இன்றி தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிக்க | கூட்டணி குறித்து தேசிய தலைமைதான் முடிவெடுக்கும்: அண்ணாமலை