

சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளில், பல ஆண்டு காலமாக, முன்னிலையில் இருந்த சென்னையை பின்னுக்குத் தள்ளி கோவை முதல் இடத்தைப் பிடித்திருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில், மாவட்ட வாரியாக, சாலை விபத்துகளால் நேரிடும் பலி எண்ணிக்கைத் தொடர்பான புள்ளிவிவரங்கள் வெளியாகியிருக்கின்றன. இதில், சென்னை 17வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை சென்னையில் பலி எண்ணிக்கை 332 ஆக உள்ளது. வழக்கமாக இது கிட்டத்தட்ட 700 வரை பதிவாகும். விபத்துக்கால அவசர சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் கடுமையான போக்குவரத்து நெரிசலும், சென்னையில் பலி எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்திருக்கும் காரணிகளாகப் பார்க்கப்படுகின்றன.
அதிகம் விபத்துகள் நேரிடும் பகுதிகளுக்கு அருகே அதிக ஆம்புலன்ஸ் சேவையை ஏற்படுத்தியது போன்றவையும் பலி எண்ணிக்கைக் குறைந்ததற்கான காரணியாகக் கூறப்படுகிறது.
சென்னையில், விபத்துக்கால அவசர சிகிச்சை இலவசம் என்ற இன்னுயிர் காப்போம் 48 திட்டத்தின் கீழ் 1,200 மருத்துவமனையில் இணைந்திருக்கின்றன. இதனால்தான் மாநிலத்திலேயே அதிக விபத்துகள் நிகழும் சென்னை மாநகரம், பலியில் குறைந்திருக்கிறது. உரிய நேரத்தில் சிகிச்சையால் 80 சதவீத உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றுவருவதால் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் நத்தை வேகத்தில் ஊர்ந்து செல்வதால், விபத்துக்குக் காரணமாக அதிவேகம் என்பது பல வழித்தடங்களில் இல்லாமலேயே போய்விட்டது.
கோவையில், தொழில்வளர்ச்சி காரணமாக பல்வேறு சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால், அங்கு விபத்துகளும் பலி எண்ணிக்கையும் அதிகரித்து கிட்டத்தட்ட 700ஐ நெருங்கியிருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் 585 பலி எண்ணிக்கையுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.