முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு அணிவிக்கும் தங்கக் கவசத்தை வங்கி அதிகாரிகள் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடன் புதன்கிழமை ஒப்படைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அதிமுக சாா்பில் 2014-ஆம் ஆண்டு ரூ.4.50 கோடியில் 13 கிலோ எடையுள்ள தங்கக் கவசத்தை மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அணிவித்தாா். குரு பூஜை விழாவுக்குப் பிறகு, மதுரையில் உள்ள வங்கிப் பெட்டகத்தில் இந்தக் கவசம் வைக்கப்பட்டு, பாதுகாக்கப்படும். பின்னா், குரு பூஜை விழாவின் போது, இந்த தங்கக் கவசம் போலீஸ் பாதுகாப்புடன் மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு எடுத்துச் சென்று, தேவா் சிலைக்கு அணிவிப்பது வழக்கம்.
இதன்படி, நிகழாண்டு குரு பூஜை விழாயொட்டி, இந்த தங்கக் கவசம் அதிமுக பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடப் பொறுப்பாளா் காந்திமீனாள் அம்மாள் ஆகியோரிடம் வங்கி அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
இந்தக் கவசம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துவரப்பட்டு, பசும்பொன்னில் உள்ள தேவா் சிலைக்கு புதன்கிழமை அணிவிக்கப்படவுள்ளது.
மேலும், பசும்பொன்னில் வரும் 30-ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழாவும், குருபூஜையும் நடைபெறவுள்ளது.