திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் அட்டவணை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் எப்போது எழ வேண்டும், என்னென்ன உணவுகள் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கியுள்ளன.
தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் கேஜரிவால் வீட்டில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மார்ச் 21-ஆம் தேதி அவரை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அமலாக்கத்துறை, காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.
இன்றுடன் (ஏப். 1) அமலாக்கத்துறை காவல் நிறைவடைந்த நிலையில், தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து திகார் சிறையிலடைக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து பலத்த பாதுகப்புடன் அவர் திகார் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். முதல்வர் பதவியில் இருக்கும்போதே திகார் சிறைக்கு செல்வது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.
திகார் சிறையில் 2ம் எண் அறையில் அரவிந்த் கேஜரிவால் அடைக்கப்பட்டுள்ளார். அறைக்கு வெளியே 24 மணிநேர கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) பொருத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதனிடையே திகார் சிறையில் அவர் காலை 6.30 மணிக்கு எழ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவருக்கு 6.40 மணிக்கு காலை உணவு வழங்கப்படும் (தேநீர், ரொட்டி உள்பட). மதிய உணவாக சப்பாத்தி அல்லது சாப்பாடு, சப்ஜி மற்றும் பருப்பு வழங்கப்படும். மருத்துவர் அறிவுரைப்படி உணவுக் கட்டுப்பாடுக்கு அனுமதிக்கப்படும்.
மதிய உணவுக்கு பிறகு அவர் தனது சிறை அறைக்குச் செல்லலாம். மாலை 3 மணி வரை அதில் இருக்க வேண்டும். தனது வழக்குரைஞரை மாலை 4 மணியளவில் சந்திக்கலாம். இரவு உணவு மாலை 6.30 மணிக்கு வழங்கப்படும் (அறைக்கே கொண்டுசெல்லப்படும்). அரசு சேனல்களை மட்டும் அறையின் தொலைக்காட்சியில் பார்க்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
திகார் சிறையில் உள்ள 15 நாள்களும் அரவிந்த் கேஜரிவால் 6 பேரை மட்டுமே சந்திக்க முடியும். அவர்கள் யார் யார் என்ற பட்டியலை கேஜரிவாலே வழங்கியதாவும் தகவல் வெளியாகியுள்ளது.