தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திகார் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பு 5 கோரிக்கைகளை முன்வைத்தார்.
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையின் சம்மனை தொடர்ந்து நிராகரித்து நேரில் ஆஜராக மறுத்து வந்த தில்லி முதல்வர் கேஜரிவாலின் வீட்டுக்குச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் மார்ச் 21-ஆம் தேதி சோதனைக்கு பிறகு அவரை கைது செய்தனர்.
அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அமலாக்கத்துறை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.
இன்றுடன் அமலாக்கத்துறை காவல் நிறைவடைந்த நிலையில், தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்படுத்தப்பட்டார். இனி கேஜரிவாலிடம் விசாரணை நடத்த வேண்டிய தேவை இல்லை என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கேஜரிவாலுக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து திகார் சிறையிலடைக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து பலத்த பாதுகப்புடன் அவர் திகார் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
வழக்கு விசாரணையின்போது அரவிந்த் கேஜரிவால் தரப்பில் வழக்குரைஞர்கள் விக்ரம் செளத்ரி, ரமேஷ் குப்தா ஆகியோர் ஆஜராகினர். அரவிந்த் கேஜரிவால் சார்பில் 5 கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.
அரவிந்த் கேஜரிவாலுக்கு சிறையில் மருந்துகளை வழங்க வேண்டும்
பகவத் கீதை, ராமாயணம், பிரதமர்கள் முடிவு செய்யப்படும் முறை பற்றி பத்திரிக்கையாளர் நீர்ஜா செளத்ரி எழுதிய புத்தகம் ஆகிய 3 புத்தகங்களை எடுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும்
மதம் சார்ந்து தற்போது அணிந்திருக்கும் ஆபரணங்களை உடன் வைத்திருக்க அனுமதிக்க வேண்டும்.
சிறப்பு உணவுக் கட்டுப்பாடு
மேசை மற்றும் நாற்காலி தர வேண்டும்
ஆகிய 5 கோரிக்கைகள் அரவிந்த் கேஜரிவால் சார்பில் முன்வைக்கப்பட்டன.
இது தொடர்பாக பேசிய ஆம் ஆத்மி கட்சியின் செய்தித்தொடர்பாளர் பிரியங்கா கக்கார், தில்லி முதல்வர் படித்தவர். அவரின் நேரத்தை பயனுள்ளதாக மாற்றிக்கொள்வதற்காக 3 புத்தகங்களை தன்னுடன் சிறைக்கு எடுத்துச்செல்ல கோரியுள்ளார் என்று கூறினார்.
திகார் சிறையில் 2ம் எண் அறையில் அரவிந்த் கேஜரிவால் அடைக்கப்பட்டுள்ளார். தொடர் கண்காணிப்பிற்காக அங்கு தனி காவலரும் நியமிக்கப்பட்டுள்ளார். அறைக்கு வெளியே 24 மணிநேர கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) பொருத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.