பாஜக ஆட்சியில் அரசியல் சாசன தலைவரின் நிலை இதுதான் என்று கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், பாஜக ஆட்சியில் அரசியல் சாசன தலைவரின் நிலை இதுதான். பாலின பாகுபாடு உள்ளதை இப்படம் காட்டுகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். பாஜக முதுபெரும் தலைவா் எல்.கே. அத்வானிக்கு (96) நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அவரது இல்லத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று வழங்கினாா்.
இந்த நிகழ்வில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் அத்வானியின் குடும்பத்தினா் பங்கேற்றனா். அப்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நின்று கொண்டிருக்க, பிரதமர் மோடியும் அத்வானியும், இருக்கையில் அமர்ந்திருந்த புகைப்படம் வெளியானது.
அந்தப் புகைப்படத்தை பகிர்ந்த கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிகழ்விற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் கண்டனம் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவரை நிற்கவைத்து படம்பிடித்து வெளியிடுவது என்னவகை பண்பாடு? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.