சென்னை தாம்பரம் ரயில்நிலையத்துக்கு வந்த நெல்லை விரைவு ரயிலில் ரூ. 4 கோடி பணம் கொண்டு செல்வதாக காவல் துறையினருக்கு கிடைத்த தகவலில் படி தாம்பரம் உதவி ஆணையர் நெல்சன் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நெல்லை விரைவு ரயிலில் சோதனையிட்டனர்.
அப்போது, 6 பைகளில் கட்டுகட்டாக பெட்டிகளில் மறைத்து பணத்தை எடுத்து சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து மூன்று நபர்களை கைது செய்த காவல் துறையினர், தாம்பரம் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
அப்போது, அந்த மூன்று நபர்களும் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள தனியார் உணவகத்தில் வேலை செய்வதாகவும், இந்த பணம் தேர்தல் செலவுக்காக அவர் எடுத்து வர சொன்னதாகவும் காவல் துறையினரிடம் தெரிவித்தனர்.
இதனையடுத்து, இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இணை ஆணையர் மகேஸ்வரி மற்றும் துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி ஆகியோர் பணத்தை எடுத்து வந்த சதீஷ் (வயது 33) நவீன் (வயது 31) பெருமாள் (வயது 25) ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் கைப்பற்றப்பட்ட பணத்தை தாம்பரம் வட்டாட்சியர் நடராஜன் முன்னிலையில் காவல் துறையினர் கருவுலத்தில் ஒப்படைத்தனர்.