தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் அதிமுக - திமுக இடையேதான் போட்டி என்பதை மக்கள் நிரூபிக்க வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ராமநாதபுரம் அதிமுக வேட்பாளர் பா.ஜெயபெருமாளை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.
பிரசார பொதுக்கூட்ட மேடையில் பேசிய அவர், கரோனா காலத்தில் 11 மாதங்கள் ஆசிரியர்களுக்கு பிடித்தமின்றி அதிமுக ஆட்சியில் ஊதியம் வழங்கினோம்.
உள்ளாட்சித் துறையில் 140 விருதுகளை பெற்று நல்லாட்சி தந்தது அதிமுக ஆட்சி. விவசாயிகளுக்காக அதிக நிதி ஒதுக்கியது அதிமுக அரசு. நானும் ஒரு விவசாயி என்பதால் ராமநாதபுரத்தை செழுமையாக்க நினைத்தேன். விவசாயிகளுக்காக சட்டப் போராட்டம் நடத்தியது அதிமுக.
ரூ. 14 ஆயிரம் கோடியில் காவிரி - குண்டாறு திட்டத்தை ராமநாதபுரத்துக்கு கொண்டுவந்தேன். கச்சத்தீவை மீட்டால்தான் மீனவர்களின் பிரச்னை தீரும்.
ஆனால், 3 ஆண்டு திமுக ஆட்சியில் ரூ.3.5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர்.
ஒரு அரசு மாறினால், மக்கள் நலத் திட்டமாக இருந்தால் அதனைத் தொடர்ந்து செயல்படுத்துவதுதான் நல்ல அரசு. ஆனால், மக்கள் பலனைப் பற்றி கவலைப்படாமல் மாற்று கட்சி கொண்டு வந்தது என்பதாலேயே பல நல்ல திட்டங்களை திமுக நிறுத்திவைத்துள்ளது என எடப்பாடி பழனிசாமி பேசினார்.