ஊழல்வாதிகளைக் காப்பதில்தான் திமுக - காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளதாக மேட்டுப்பாளையத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, திமுக வெறுப்பு அரசியலைத்தான் செய்கிறது, தமிழக வளர்ச்சியில் அக்கட்சிக்கு அக்கறை இல்லை. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியின் நடைபெற்றபோது, மாநிலங்கள் பாரபட்சம் காட்டப்பட்டன. ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி செய்யும் போது, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைத்தான் நாங்கள் மேற்கொண்டுள்ளோம் என்றார்.
நாங்கள் பழங்குடியினப் பெண்ணை குடியரசுத் தலைவர் ஆக்கினோம். ஆனால், இந்தியா கூட்டணியினர் அதனை எதிர்த்தனர்.
தமிழகத்திலிருந்து திமுகவை வெளியேற்றுவது என்பது பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியால்தான் செய்ய முடியும் என எல்லோரும் சொல்கிறார்கள்.
காங்கிரஸும் திமுகவும் எஸ்சி/எஸ்டி, ஓபிசிக்கு வீடு மற்றும் மின்சாரத்திற்காக நீண்ட காலமாக ஏங்க வைத்தன, ஆனால் பாஜக வீடு, மின்சாரம் மற்றும் இலவச ரேஷன் கொடுத்துள்ளது. காங்கிரஸ் மற்றும் திமுக குடும்பக் கட்சிகள், பொய் சொல்லி ஆட்சியை தக்க வைக்க துடிக்கின்றன என்று மோடி கூறியுள்ளார்.
இரண்டுநாள் சுற்றுப்பயணமாக செவ்வாயன்று தமிழகம் வந்தார் பிரதமர் நரேந்திர மோடி, சென்னையில் நேற்று மாலை நடந்த வாகனப் பேரணியில் பங்கேற்று, பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
இன்று காலை வேலூர் சென்று, அங்கு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக உரையாற்றினார்.
பின்னர் அங்கிருந்து மேட்டுப்பாளையம் சென்று பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.