தேர்தல் பத்திரங்கள் மூலம் மோடியின் உண்மை முகம் அம்பலம்: ராகுல் காந்தி

தேர்தல் பத்திரங்கள் மூலம் மோடியின் உண்மை முகம் அம்பலம்: ராகுல் காந்தி

தேர்தல் பத்திரங்கள் மூலம் மோடியின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கோவையில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழர்களின் மொழி, கலாசாரம், வரலாறு ஆகியவவை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. தமிழ்நாட்டு மக்கள் என் மீது காட்டும் அன்பும் பாசமும் எனக்கு வழிகாட்டியாக இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு வருவதை எப்போதும் விரும்புகிறேன். தமிழ்நாட்டுக்கு வந்தவுடன் எனக்கு உற்சாகம் பிறக்கிறது. நான் தமிழ்நாட்டு மக்களை நேசிக்க பல்வேறு காரணங்கள் உள்ளன. தமிழ்நாட்டு மக்கள் என் மீது காட்டும் அன்பும் பாசமும் எனக்கு வழிகாட்டியாக இருக்கிறது. இந்தியாவில் இன்று மிகப்பெரிய தத்துவப் போராட்டம் நடந்து வருகிறது. இந்தியாவில் விரைவில் ஒரு புயல் வீசப்போகிறது. அதன் மூலம் மோடி ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்படுவார். தற்போது நடப்பது மோடியின் அரசு அல்ல. அதானியின் அரசு. மோடி அரசின் அனைத்து நடவடிக்கைகளும் அதானிக்காகவே நடைபெறுகின்றன. விமான நிலையங்கள், துறைமுகங்கள், சுரங்கங்கள், நெடுஞ்சாலைகள் என அனைத்தும் அதானிக்கே தாரைவார்க்கப்படுகின்றன.

அதானி, மோடி தொடர்பு குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய சில வாரங்களிலேயே எனது எம்பி பதவி பறிக்கப்பட்டது. அதானி பற்றி பேசியதால் எம்பி பதவி மட்டுமல்ல, நான் குடியிருந்த வீட்டையும் பறித்துவிட்டார்கள். நான் குடியிருந்த வீடு பறிபோனதால் எனக்கு கவலை இல்லை. ஏனென்றால் கோடிக்கணக்கான மக்களின் மனங்களே எனது வீடு. எனக்காக தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் தங்கள் கதவுகளை திறந்தே வைக்கிறார்கள். தமிழ்நாடு மக்கள் மிகவும் புத்திசாலிகள், தங்களை நோக்கி வருவோரின் எண்ணத்தை உடனே புரிந்து கொள்வார்கள். தமிழ்நாட்டுக்கென தனி வரலாறு இருக்கிறது. பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் ஆகிய பெருந்தலைவர்கள் தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்கள். பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் வெறும் தலைவர்கள் மட்டுமல்ல. தமிழ் மக்களின் ஆன்மாவை பிரதிபலிப்பவர்கள். அவர்கள் பேசியதை உலகமே கேட்டது. அது தமிழர்களின் குரலாகவே ஒலித்தது. இப்போது தமிழ்நாட்டு மக்கள் சில சாதாரண கேள்விகளை எழுப்புகிறார்கள்.

தேர்தல் பத்திரங்கள் மூலம் மோடியின் உண்மை முகம் அம்பலம்: ராகுல் காந்தி
ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்: ராகுல் காந்தி

தமிழ், கலாசாரம், வரலாறு ஆகியவற்றை பாஜகவினர் அவதூறாக பேசுவது ஏன் என்பதே தமிழ்நாட்டு மக்களின் முதல் கேள்வி. தமிழ்நாட்டில் வந்து சாம்பார் பிடிக்கும் என பேசிவிட்டு தில்லி சென்றதும் ஒரே மொழி என முழங்குவது ஏன். தமிழ்நாடு வந்து தோசை பிடிக்கும் என்கிறீர்கள், இங்கிருந்து சென்றவுடன் அவதூறாக பேசுகிறீர்கள். ஒரே நாடு, ஒரே மொழி என பேசுவது ஏன்?. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மூலம் சிறு, குறு தொழில்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. பல லட்சம் பேர் வேலையிழந்தனர். எனது அண்ணன் மு.க.ஸ்டாலின், நான் வேறு யாரையும் அண்ணன் என்று அழைத்தது இல்லை. தேர்தல் பத்திர ஊழல் மற்றும் பாஜகவின் வாஷிங் மெஷின் பற்றி மு.க.ஸ்டாலின் பேசினார். அது எப்படி நடக்கிறது என விளக்குகிறேன். முதலில் அரசியலை சுத்தப்படுத்தப் போவதாக மோடி கூறினார். அதற்காக தேர்தல் பத்திரம் என்ற ஒன்றை கொண்டு வந்தார். தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு நிதி தருகிறார்கள் என்ற விவரம் யாருக்கும் தெரியாது.

சில வருடங்களுக்கு பிறகு தேர்தல் பத்திரங்களே சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளித்தவர்கள் யார் என்பதை உடனே வெளியிட உச்சநீதிமன்றம் உத்தவிட்டது. உடனேபெயர்களை வெளியிட வங்கி மறுத்துவிட்டது. வெளியிட்டே ஆக வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியதால் பெயர் வெளியானது. தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளித்தோரின் விவரங்கள் வெளியே வந்ததால்தான் மோடியின் நூதன மோசடி முகம் அம்பலமானது. தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நிதி என்பது மிரட்டி பணம் பறிக்கும் செயல்தான். ஒரு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுக்கிறார்கள். சில நாட்களில் அந்த நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளிக்கின்றன. உலகிலேயே மாபெரும் ஊழல் மோடி செய்ததுதான். நாட்டின் மிகப்பெரிய திட்டங்களுக்கு கமிஷனாகவே தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் வசூலிக்கப்படுகின்றன.

நாட்டில் உள்ள ஏழை மக்களுக்காக பிரதமர் மோடி எதையும் செய்யவில்லை. நாட்டின் இளைஞர்களில் 83 சதவீதம் பேர் வேலையில்லாமல் திண்டாடுகின்றர். பொருளாதாரம் நீதியான ஏற்றத்தாழ்வு மிக மோசமானதாக இருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியை விட பொருளாதார ஏற்றத்தாழ்வு இபபோது அதிகமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் 30 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். ஆனால் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய பிரதமர் மோடி தயாராக இல்லை. விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மறுக்கும் பிரதமர் பெரும் பணக்காரர்களுக்கு 14 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com