பாஜக வென்றால் திருப்பூரை மணிப்பூர் ஆக்கிவிடுவர் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் அவிநாசியில் இன்று நடந்த தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மோடியின் பாஜக வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு. கலவரம் செய்வது பாஜகவின் டிஎன்ஏவில் ஊறிப்போய் உள்ளது. பாஜகவை உள்ளே நுழையவிட்டால் சமூக அமைதியை கெடுத்துவிடுவார்கள். அதிகார திமிரில் உள்ள பாஜக வென்றால் திருப்பூரை மணிப்பூர் ஆக்கிவிடுவர். பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை பிரதமர் மோடி சிதைக்கப் பார்க்கிறார்.
புதிய இந்தியாவை உருவாக்குவேன் என்று அளித்த வாக்குறுதியை மோடி நிறைவேற்றினாரா?. நாட்டின் கடன் அளவு உயர்வு, ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்டவைதான் நடந்துள்ளன. நாட்டில் உள்ள 41 கோடி மக்களுக்கு வீடுகள் இல்லை. விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 ஆண்டு பெரும்பான்மையோடு ஆட்சி செய்தும் வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை. ராகுல்காந்தியின் ஒரு நாள் வருகையில் பிரதமரின் ஒட்டுமொத்த பிரசாரமும் காலி.
கோவையில் ராகுலும், நானும் நடத்திய கூட்டம் பாகுபலி போல் பிரம்மாண்டமாக இருந்தது. சமூக நீதி என்றாலே பிரதமர் மோடிக்கு அலர்ஜியாக உள்ளது. பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முதலில் இடஒதுக்கீட்டைதான் காலி செய்வார். வருகிற மக்களவைத் தேர்தல் இரண்டு தத்துவங்களுக்கு இடையே நடக்கிற போர். மீண்டும் பாஜக ஆட்சி அமைத்தால் அரசமைப்பையும் மாற்றிவிடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.