திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்திரம் அருகேயுள்ள அகஸ்தியா்பட்டியில் இன்று(ஏப். 15) நடைபெற்ற பாஜக தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி கலந்துகொண்டு பாஜக வேட்பாளா்களை ஆதரித்துப் பேசினார்.
இந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி கலந்து கொண்டு திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளின் பாஜக வேட்பாளா்களை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொண்டார். அவர் பேசும்போது,
“ நெல்லையப்பர், காந்திமதி அம்மையாருக்கு என்னுடைய வணக்கம். இந்த கூட்டத்தையும், உற்சாகத்தையும் பார்த்து காங்கிரஸ் கூட்டணிக்கு தூக்கம் தொலைந்திருக்கும். நெல்லை - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. தெற்கிலும் புல்லட் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டிகளில் 1.20 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் புராதன சின்னங்கள் உலக புகழ் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாசார மையத்தை அமைப்போம் என்று தெரிவித்துள்ளோம்.
தமிழ் மொழிக்கு உலக அங்கீகாரம் பெற்றுத் தரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்காக 12 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவை மற்றோரு நாட்டிற்கு தாரைவார்த்தது யார்?கச்சத்தீவை திரைமறைவில் வேறு நாட்டுக்கு திமுக - காங்கிரஸ் கொடுத்ததை மறக்க முடியாது. கச்சத்தீவு விவகாரத்தின் ரகசிய செயல்களை பாஜகதான் வெளிக்கொண்டு வந்தது.
தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. திமுக அரசு போதைப் பொருள் விற்பனையை ஊக்குவித்து வருகிறது. போதைப்பொருள் விற்பவர்களை நான் விடமாட்டேன், போதைப்பொருள் விற்பனையை தடுத்து நிறுத்துவேன்
2047 ஆம் ஆண்டில் இந்தியாவை வலிமைமிக்க நாடாக மாற்றுவது குறித்து 24 மணி நேரமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். தமிழகத்தில் எனக்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்த்து திமுக அரசுக்கு பயம் வந்துவிட்டது.
பாஜகவினரின் பிரசாரக் கூட்டத்தை தடுக்கும் செயல்களில் திமுக அரசு ஈடுபடுகிறது. பாஜகவினர் யாரும் பயப்பட வேண்டாம், ஒட்டுமொத்த தமிழகமும் உங்கள் பின்னால் தான் உள்ளது." எனப் பேசினார்.