சிதம்பரம்: சிதம்பரம் சீர்காழி செல்லும் சாலையில் சபாநாயகர் தெருவில் அமைந்துள்ள மௌனமடத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மௌன சுந்தரமூர்த்தி சுவாமிகள் (76) செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார்.
இவரது சொந்த ஊர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள விழுப்பள்ளம் முருக முதலி தெரு. இவர் 10 வயது சிறுவனாக இருக்கும் போதே சிதம்பரம் மௌனமடத்திற்கு வந்துவிட்டார்.
பின்னர் இவர் பள்ளி கல்லூரி பயின்று முடித்து, 1981 ஆம் ஆண்டு முதல் மௌனமடத்தின் மடாதிபதி ஆனார்.
இவர் தருமையாதீனத்தின் மீது மிகுந்த ஈடுபாடு உடையவர். தமிழ் நூல்கள் பயின்று ஆசிரியராக பணியாற்றிய இவர் நல்ல இலக்கிய சிந்தனை பேச்சாளர். மேலும் தாமே மடத்தின் வயல்களுக்கு சென்று விவசாயம் கவனித்து பசு பராமரிப்பு செய்து வந்தார்.
கிருத்திகைதோறும் வைத்தீஸ்வரன்கோயில் அபிஷேகத்திற்கு பால் வழங்கியும், பசு வழங்கியும் மகிழ்ந்தவர். ஆதீன குருபூசை தோறும் தவறாது செய்து வந்தார். வெள்ளைவாரணாரிடன் பயிற்சி பெற்ற இவர் நடராஜரை நித்தம் சென்று வழிபாடு செய்து தீட்சதர்களிடம் மிகவும் பற்றுடையவரானார்.
தில்லை திருவிழாக்காலத்தில் திருமடத்தில் அடியார்கட்கு அன்னம்பாலிப்பு செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.