அரசியல் கட்சித் தலைவர்கள் மதங்களை விமர்சிக்கும் கருத்துகளை தேர்தலுக்காக பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
ராஜஸ்தானில் இஸ்லாமியர்கள் குறித்து நரேந்திர மோடி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்படி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. பிரதமர் போன்று உயர் பதவியில் இருப்பவர்கள் வாக்கு வங்கி அரசியலுக்காக சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இறையாண்மைக்கு உகந்தது அல்ல.
அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சைக் கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது.
இஸ்லாமிய மக்களின் மனது புண்படும்படியான கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், தலைவர்கள் இது போன்ற கருத்துகளை தவிர்ப்பது மத நல்லிணக்கத்துக்கு நல்லது என எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.