செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், திருவிடந்தை ஸ்ரீ நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் சித்திரைப் பெருவிழா பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், திருப்போரூர் அடுத்த திருவிடந்தையில் ஸ்ரீ நித்ய கல்யாண பெருமாள் கோயில் உள்ளது.
இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவ திவ்ய தேசத்தில் 62 ஆவது திவ்ய தேசமாக தெய்வீக மனம் கமழ புராதான புகழுடன் ஏகாந்தமாக வங்கக் கடலோரம் பெருமாள் குடி கொண்ட திருத்தலமாக விளங்குகிறது.
இக்கோயிலில் திருக்குளத்தில் நீராடினாள் அவர்கள் செய்த பாவங்கள் நிவர்த்தி ஆகும். ஒரு முனிவரின் 360 மகள்களையும் தினமும் ஒரு பெண் விதம் 360 பெண்களை மனம் புரிந்த கொண்டதால் இவருக்கு நித்ய கல்யாண பெருமாள் என்ற பெயர் பெற்றார்.
எனவே, இக்கோயிலில் திருமணம் ஆகாத ஆண் பெண்கள் திருமண தோஷம் நீக்கும் பரிகார திருத்தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு சித்திரைப் பெருவிழா பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை ஒட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாரதனை நடைபெற்றது. உற்சவமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருள கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை கண்டு தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, தோளுக்கு இனியாள் பகல் உற்சவம், இரவு அன்ன வாகன உற்சவம் நடைபெறும். இரண்டாம் நாள் புதன்கிழமை பகல் வெட்டிவேர் சப்பரம் உற்சவம், இரவு சிம்மவாகன சேவை உற்சவம், மூன்றாம் நாள் வியாழக்கிழமை பகல் சூரிய பிரபை உற்சவம், இரவு சிறிய திருவடி சேவையும், நான்காம் நாள் வெள்ளிக்கிழமை பகல் சேஷ வாகன சேவை உற்சவமும், இரவு புன்னையடி சேவை உற்சவம், ஐந்தாம் நாள் சனிக்கிழமை பகல் பல்லக்கு நாச்சியார் திருக்கோலம் உற்சவம், இரவு கருட சேவை உற்சவம் , ஆறாம் நாள் ஞாயிற்றுக்கிழமை பகல் சூர்ணாபிஷேகம் உற்சவம், இரவு யானை வாகன சேவை உற்சவம், ஏழாம் நாள் திங்கள்கிழமை பகல் திருத்தேர் உற்சவம், இரவு தோளுக்கு இனியாள் உற்சவமும், எட்டாம் நாள் செவ்வாய்க்கிழமை பல்லக்கு வெண்ணெய் தாழி கண்ணன் சேவை உற்சவம், இரவு குதிரை வாகன சேவை உற்சவம், ஒன்பதாம் நாள் புதன்கிழமை பகல் பல்லக்கு உற்சவமும் இரவு சந்திர பிரபை உற்சவம், பத்தாம் நாள் வியாழக்கிழமை பகல் புஷ்ப யாகம் துவாதச ஆராதனை, இரவு தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சரவணன், நிர்வாக பணியாளர்கள், பட்டாச்சாரியார்கள் விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் நடத்தி வருகின்றனர்.