கம்பம்: மங்கல தேவி கண்ணகி கோயிலுக்கு உணவு கொண்டு சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்திய உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் தாட்சாயணிடம் அறக்கட்டளையினர் வாக்குவாதம் செய்து முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மங்கல தேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. அதற்காக கூடலூரிலிருந்து அறக்கட்டளை நிர்வாகிகள் டிராக்டர் வாகனங்களில் உணவு கொண்டு சென்றனர்.
கண்ணகி கோயில் செல்லும் மலச்சாலையில் உள்ள கொக்கரகண்டம் சோதனை சாவடியில் கேரள போலீஸார் மறித்து வாகனங்கள் செல்லக்கூடாது என்று தடை செய்தனர். அவர்களுடன் அறக்கட்டளை நிர்வாகிகள் வாக்குவாதம் செய்தனர்.
அப்போது அங்கு வந்த உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் தாட்சாயணி அறக்கட்டளை நிர்வாகிகளிடம் வந்து உங்கள் பூசாரிகள் பூஜை செய்ய அனுமதியில்லை, நீங்கள் மேலே செல்லக்கூடாது என்று கூறி வாகனங்களின் சாவிகளை எடுத்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள் கோட்டாட்சியரை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்பு உணவு வாகனங்கள் அனுப்பப்பட்டது. அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டவர்கள் காலை 6 மணிக்கு கோயிலை சென்றடைந்தனர். விழா இன்னும் தொடங்கவில்லை.